ஸ்ரீ ரஸாலமஹாபல வைபவம் (மாம்பழக்கதை)

(எழுதியவர்: பிரம்மஸ்ரீ. நீர்வை. தி. மயூரகிரி சர்மா)

முருகப்பெருமானைப் பற்றிய புராண, வரலாற்று நிகழ்வுகள் சம்ஸ்கிருதம் மற்றும் தமிழில் மிகப்பிரபலமானவை.

எனினும், இக்கதைகளுள் முக்கியமானதாக போற்றப்படும் ‘மாம்பழக்கதை’ என்று இரசிக்கப்படும் கதை முருகவரலாறு பேசும் முக்கிய சம்ஸ்கிருதமொழி நூல்களான குமாரசம்பவம், ஸ்காந்தபுராணம் ஆகியவற்றில் காணப்படவில்லை. (இதனால் தமிழில் கச்சியப்பசிவாச்சார்யார் செய்த கந்தபுராணத்திலும் இல்லை)

எனினும், பழநித்தலபுராணமாக விளங்குவது இக்கதையே.. தமிழ்நாட்டின் மிகப்புகழ்பெற்ற திருத்தலமான முருகனின் ஆறுபடைவீடுகளில் மூன்றாவது படைவீடான இந்தப்பழநித்தலத்தில் முருகப்பெருமான் எழுந்தருளியமைக்கான முக்கியகதையாக இக்கதையே சொல்லப்பட்டு வருகின்றது.

அத்துடன் தமிழ்த்திரைப்படங்களிலும் இக்கதை சிறப்பான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கந்தன்கருணை திருவிளையாடல் திரைப்படத்தில் இக்கதையும், அதோடு இணைந்ததான ஓளவையார் புகழ் கே.பி.சுந்தராம்பாள் பாடிய ‘பழம் நீ அப்பா..’ என்ற பாடலும் முருகபக்தர்களின் உள்ளதை வெகுவாக கவர்ந்தவையாகும்.

இத்தகு மாம்பழத்திருக்கதை சொல்லுகிற தத்துவார்த்த விஷயங்களை வெளிப்படுத்திய வரலாறோ, கதைகளோ இது வரை, சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டதாக எம்மால் அறியமுடியவில்லை..

அவ்வகையில் தமிழோடு கலந்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களுடன், உரையிடையிட்ட பாட்டுடைக் காவியமாக புதுமுயற்சியாக இந்த மாம்பழக்கதை ‘சூதபல- ரஸாலமஹாபல வைபவம்’ அல்லது ‘ஸ்ரீ தண்டபாணி ஸ்வாமி வைபவம்’ அல்லது “ஜ்ஞாநபல உத்ஸவ பத்ததி” தங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது.

இந்த முயற்சிக்கு முன்னோடியாக விளங்கியவர் அமரத்துவம் எய்திய யாழ்ப்பாணம். வியாகரணசிரோமணி பிரஹ்மஸ்ரீ. சீதாராமசாஸ்திரிகள் ஆவார் என்பதும் இங்கே நன்றியோடு குறிப்பிட வேண்டியுள்ளது.

சாஸ்திரிகளின் முப்பதாண்டுகளுக்கு முன்னைய பழைய கையெழுத்துப் பிரதி யுத்தகாலத்தில் தொடர்ந்த இடப்பெயர்வுகளால், கைவிடப்பட்டு, மழையில் நனைந்து, சிதைந்து, பல பாகங்களைக் காண இயலாத நிலையிலும், சில பாகங்கள் எழுதப்படாத நிலையிலும் கிடைத்தன.

வேறு கைப்பிரதியும் எவரிடமும் இல்லை.. எனவே, பலவற்றை மாற்றியும், சிலவற்றிற்கு புதிய சொற்களை அமைத்தும், ஓரிரு ஸ்லோகங்களை முற்றிலும், புதிதாக எழுதி இணைத்தும் இக்கதையை பூரணப்படுத்தியுள்ளேன். இந்த பத்ததியை சாஸ்திரிகள் எழுதியதன் முக்கிய நோக்கமாக, அதற்கு முன்னரே யாழ்ப்பாணத்து கோவில்கள் சிலவற்றில் நடைபெற்று வரும் “மாங்கனி உத்ஸவத்தை நெறிப்படுத்துவதே’ இருந்திருக்கிறது. ஆனாலும் பத்ததி பரவலடையாமையால் அல்லது பத்ததி அச்சேறாமையால், பின் சிதைந்து போனதால், மாங்கனி உத்ஸவங்களில் இதனை பாவிக்கும் நடைமுறை இப்போதில்லை..

ரஸால மஹாபல வைபவம்

எல்லா உயிர்களுள்ளும் நிறைந்திருப்பவரும், தனக்குவமை இல்லாத தயாபரருமாகிய சிவபெருமான் திருக்கைலாயமாமலையில் எழுந்தருளி அருள்கிறார். அவரது வாமபாகத்திலே என்றும் அகலாத அன்னையான பார்வதி காட்சி தருகிறாள். சக்தி அம்சமான முருகன் அதனை வெளிப்படையாக ஏற்று அன்னை அருகில் அமர்ந்திருக்கிறான். பிரணவஸ்வரூபனான கணேசன் சிவனாரின் வலது பாகத்தில் தம் தந்தையோடு இணைந்து இருக்கிறான்.

சிவகண நாயகரான நந்தியம்பகவான் தேவர்,முனிவர்,அடியவர் யாவரும் முன்னின்று சேவிக்க வேண்டிய முறைகளை வகுத்தருள்கிறார். தூப, தீப ஆராதனைகளாலும், வேத மந்திரங்களாலும், சர்வ உபசாரங்களாலும் அடியவர்கள் பார்வதி பரமேஸ்வரரை வழிபடுகின்றனர்.

அவ்வமயம் மூவுலகிலும் உலவி வருபவரும் சிவ- விஷ்ணு ஐக்கியத்தை உலகிற்கு வெளிப்படுத்தும்; அற்புதருமாகிய தேவமுனிவர்; ‘கலகப்ரிய” நாரதமாமுனிவர் கையிலே ஒரு அபூர்வமான கிடைத்தற்கரிய “ஒரு மாங்கனியை” ஏந்தியவராக திருக்கைலாயம் வந்து சேருகிறார்.

அந்த மாமலையை அணுகியதும், ‘ஹர ஹர மஹாதேவ..’ ‘ஸம்போ மஹாதேவ..”என்ற கோஷமிட்டவாறு.. உள்ளம் உருக, ஆனந்தக்கண்ணீர் பொழிய இறைவன் திருமுன்றலை
அடைகிறார்.

உமயா ஸஹிதம் சம்பும்
கைலாஸாத்ரி நிவாஸிநம்//
ஸேவார்த்தி மாகதஸ்தத்ர
நாரதஸ்த்வா ம்ருகஸ்தக//

தான் கொண்டு வந்திருந்த மாம்பழத்தை இறைவனிடம் காணிக்கையாக சமர்ப்பித்து, ஆதிதம்பதிகளை பக்தியோடு போற்றி நிற்கிறார்.

பலம் சோவாய நீக்ருத்ய
ப்ராணநாமாதி தம்பதீ//

அப்போது, அங்கே எழுந்தருளி விளையாடும் இளவல்களான ஆனைமுகத்து அண்ணனும்,
ஆறுமுகத்துத் தம்பியும் அந்த மாம்பழத்தை வேண்டி நிற்கிறார்கள்.

சிவபெருமானோ, திருப்புன்முறுவல் செய்தவாறு, இவ்விரு குழந்தைகளையும் நோக்கி ‘இருவரில் யார் இந்த அண்டசராசரத்தை முதலில் சுற்றி வருகிறீர்களோ, அவர்களுக்கே இந்த மாம்பழம் உரியது’என்று திருவாய் மலர்ந்தருள்கிறார்.

உடனே அழகின் வடிவமான குமரன் தனது மயிலில் ஏறி மிக வேகமாக புறப்படுகிறான்.

மந்தஸ்மிதாநநோபூத்வா
கஜாநந ஷடாநநௌ
த்ருஷ்ட்வா ப்ரோச சநௌ புத்ரௌ
சுசயோ ருபயோ ரவி
ப்ரதமம் யோபுவம் க்ருஸ்தம்
பரிப்ராம்ய நிவர்த்ததே
ச்ருத்யமாம்ரபலம் ச்வாது
ச ஏவ ப்ராப்து மர்ஹதி
தக்ஷணம் ப்ரஸ்தித: ஸ்கந்தோ
மயூரமதி ருக்யச:

இவ்வாறு மயிலேறி மாயனான முருகன் பறக்க, பிள்ளை யார்? ஆகிய கணேசனோ, மெதுவாக எழுந்து கூப்பிய கைகளோடு, அடி மேல அடி வைத்து, தமது தாய் தந்தையராகிய பார்வதி பரமேஸ்வரரை மும்முறை வலம் வந்து, தாய் தந்தையரின் திருவடிகளை வணங்கி இவ்வாறு சொல்லுவாராயினார்..

“தாவர சங்கமப் பொருளான இவ்வண்ட சராசரம் எல்லாம் உம்மில் மறைந்து நிற்பதாக வேதம் சொல்கிறது. ஆகவே, மும்முறை தங்களை வலம் வந்ததால் நானே இவை எல்லாவற்றையும் சுற்றியவனாவேன். எனவே, எனக்கே உரியது இந்த மாங்கனி..” என்றார்.

பேரம்பலத்தே ஆடுகிற பித்தரும், இதற்கும் புன்முறுவல் காட்டி கணேசனிடம் மாங்கனியை அளித்தார்.

வாங்கிக் கொண்ட குறும்புக்காரப் பிள்ளையாரும் தம்பியின் வரவை எதிர்நோக்கி கைகளில் மாங்கனியை வைத்துக் கொண்டு தந்தை மடியில், அமர்ந்திருந்தார்.

“சுநை ருக்தாய விக்நேச
சிஸ்யந்யஸ்த கராம்ஜலா
பிதரௌதி: பரப்ரம்ய
நநாமபத பங்கஜம்
சராசரமிதம் க்ருஸ்தம்
புவநம் அதிலீயதே
தஸ்மாந்மயா யுதா க்ருஸ்நம்
பரிப்ராந்த இதம் ஜகத்
தேயம் பலம் இதம் அர்க்யம்
ப்ரதமம் ஹி மயாக்ருதம்
க்ருத்வா மந்தஸ்மிதம் சம்பும்
கணேசாய பலம் ததௌ

இளைய பெருமானாகிய மரகதமயூரவாஹனன் நொடிப்பொழுதில் அண்டமெல்லாம் சுற்றி கைலையை அடைகிற போது, அவனது கண்;களிலே கணேசன் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு, கைகளில் எந்தியிருக்கிற மாம்பழம் தெளிவாகத் தெரிகிறது. கோபம் வருகிறது.

வெகுண்ட முருகன் ஆடைகளை, ஆபரணங்களை எல்லாம் உதறி விட்டு ஆண்டி வேடம் பூண்டான். ஞான தபோவனர்களைப் போல, தனிமையான ஓரிடத்தை நாடினான். (தமிழகத்தின் பழனி மலையில் “பழநி ஆண்டி(டவராக)யாக, நின்றான்)

பரிப்ராம்ய புவம் க்ருகஸ்நம்
யாவதா கத்ய பச்யதி
தாவத் கணேச ஹஸ்தஸ்தம்
பலம் த்ருஷ்ட்வா சுகோபச
பூஷணாதி பரித்யஜ்ய
பிக்ஷ_ வேஷதர: குஹ:
அத்யதிஷ்டத் (பழநி)கிரிபரம்
ஞான ரூபிர ஹோகத:

இதனைக் கண்ட கருணைக்கடலான தந்தை தாய் இருவரும் தனயனின் கோபத்தைத் தணிக்கப் புறப்பட்டனர். அண்ணனான விநாயகனும் தம்பியின் கோபத்தைத் தணிக்க கூடவே புறப்பட்டார். மூவருடன் முப்பத்து முக்கோடி தேவர்களும்புறப்பட்டனர். (பழநியை அடைந்தனர்)

சிவபிரானார் தன் மைந்தனை நோக்கி “மங்களமானவனே! ‘ஆறுவது சினம்’.. நீ அறிவுப்பழம்.. அறிவுக்கனியை உண்பதற்காக தேவர்களும், ஞானிகளும், தவம் செய்கிறார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் ஞானப்பழத்தைக் கொடுப்பாய்..” என்று திருவாய் மலர்ந்தருளினார். அதனைக் கேட்ட முருகனும், சினம் நீங்கி ஆண்டியாய் நின்று அறிவுக் கனியை (ஞானப்பழத்தை) பகிர்ந்து கொள்கின்றார்.

குமாரஞ்ச சமாயாதும்
கிரிஜா குருண சஹ
கத்வா கிரி பரம் ஸ்கந்தம்
அஜூகாவஸ ஸாதரம்
பலம் த்வமேவ ஸாகஸ்ய
ஜ்ஞாநரூப பலம் கலு
இத்யேவம் சஸமாயக்தே
வ்யேமபாத்ரமுபாலகம்
க்ரோதம் விகாய வைஸ்கந்தம்
ப்ரசந்நோ வதநோ வபௌ
தத ஆபரப்யதேவாநாம்
மூநீநாம் யோகிநாம் ததா
ஸர்வேஷாம் பக்தர் ஸாஸானாம்
ஜ்ஞாந சாரம் ப்ரஸீததி

ஸ்துதி

நாரத தத்த ரஸால மஹாபல
லாப விநிஸ்சித ஸ்பர்த்த தயா
ஜடிதி சராசர ஸங்க்ரம நிர்க்கத
மயூர வாஹன விளம்ப தயா
தாத பிரகத்ஷண லப்தபலாக்ரஜ தர்ஸந
த்யாக ஸமஸ்த தண்ட தர
பூர்ண பலப்ரத பழநாபுரி நாயக
ஞான ஸ்கந்த நமோ நமஸ்தே

நாரத முனிவரால் (கைலைநாயகரிடம்) சமர்ப்பிக்கப்பெற்ற மாங்கனியை பெறுவதற்காக ஏற்பட்ட போட்டியின் பொருட்டு- சடுதியாக மயிலேறி சராசரம் எல்லாம் சுற்றி வந்து- பெற்றோரை மட்;டும் சுற்றி விட்டு தமது மூத்த சகோதரர்(கணேசக்கடவுள்) மாம்பழத்தைப் பெற்றிருப்பார்த்து- கோபித்து எல்லாவற்றையும் துறந்து விட்டு கௌபீனதாரியாக- துறவிகளுக்கே உரிய தண்டத்தை ஏந்திக் கொண்டு- பழநிமலையில் எழுந்தருளியவரே- அடியவர்கள் விரும்பிய பலன்களை முழுமையாக கொடுக்;கும் வள்ளல் பெருமானே- ஞானப்பழமாக முருகனாக காட்சி தருபவரே- போற்றி வணங்குகின்றோம்.

எழுதியவர்:
பிரம்மஸ்ரீ. மயூரகிரி சர்மா
நீர்வேலி
யாழ்ப்பாணம்.

11 Comments ஸ்ரீ ரஸாலமஹாபல வைபவம் (மாம்பழக்கதை)

  1. M Thiruvasagam

    மிகவும் நன்றாக எழுதியுள்ளது. இந்த கதை பற்றி அண்மையில் எனது குஜராத்தி நண்பருடன் பேசினேன் அவர் சொன்னார் மாம்பழ கதை தமது மொழியிலும் உள்ளது என்று. ஆனால் நான் அவரிடம் முருகன் பழனியாண்டவராக தமிழ் நாடு பழனிக்கு போனது பற்றி கேட்கவில்லை?

  2. ஓகை நடராஜன்

    அற்புதமான பணி.

    ஒரு திருத்தம். இக்கதையை காண்போர் ரசிக்கும்படியும் என்றென்றும் மனதில் பதியும்படியும் திரப்படமாக APN அவர்கள் திருவிளையாடல் படத்தில் தந்திருக்கிறார். கந்தன் கருணை அல்ல.

  3. T.Mayoorakiri sharma

    இந்த மாம்பழக்கதையை ரசித்த.. பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் எமது மனம் கனிந்த நன்றிகள்..

    இந்த மாம்பழக்கதையோடு எனக்கு தனிப்பட்ட முறையில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன.. அவற்றை இப்போது நினைத்தாலும் சந்தோஷம் உண்டாகும்.

    எமது ஊரில் பல ஆலயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் இரண்டு பிள்ளையார் ஆலயங்களும், இரண்டு முருகன் ஆலயங்களும் பெரியன.. சிறப்பு மிக்கன.. அதனால், எங்களுடைய ஊரில் விநாயகரடியார்களும், முருகனடியார்களுமே அநேகர்.. இது நிற்க,

    எங்களுடைய ஊரில் இருக்கிற ‘நீர்வைக் கந்தசுவாமி ஆலயம்’ என்ற சிறப்பு மிக்க முருகன் ஆலய பிரதான சிவாச்சார்யராக விளங்கியவர் அமரர். சிவஸ்ரீ.சு.இராஜேந்திரக்குருக்கள் என்ற பெரியவர். அவருக்கும் கலைமகள் பத்திரிகையின் ஆசிரியர் கி.வா.ஜ அவர்களுக்கும் நெருக்கமான நட்புறவு நிலவி வந்தது.

    இதனால், சிறந்த முருகபக்தரான இச்சிவாச்சார்யார் சில புதமையான உத்ஸவங்களை உருவாக்கி முருகபக்தியை ஊரில் வளர்த்தார். அந்த வகையில், 1970களின் பிற்பகுதியில் இந்த மாம்பழத்திருவிழாவை தமது முருகன் ஆலயத்தில் உத்ஸவமாக நடாத்தத் தொடங்கினார்.

    முதலில், மூஷிகத்தில் விநாயகரையும், கைலாசத்தில் பார்வதி பரமேஸ்வரரையும், மயிலில் பாலமுருகனையும் குறித்த உத்ஸவ மண்டபத்தில் எழுந்தருளச் செய்து விசேடமாக பூஜிப்பர். பிறகு விசேட கலை நிகழ்வுகள் நடைபெறும்.

    அந்த வேளையில், நாரதர் போல வேடமணிந்த ஒருவர் சிவநாம பஜனை செய்தவாறு கையில் மாம்பழம் தாங்கியவராய் அங்கு வந்து பார்வதி பரமேஸ்வரரின் திருவடிகளில் வைத்து வணங்குவார். தொடர்ந்து தீபாராதனை நடந்த உடன், மயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன் புறவீதியான ரதவீதிக்கு விரைவாக உலாவுக்குச் (உலகம் சுற்ற) செல்வார்.

    பிறகு, சாவதானமாக பிள்ளையாரை தூக்கி பார்வதி பரமேஸ்வரரை மும்முறை வலம் செய்வர். மும்முறை வலம் வந்த பிள்ளையாருக்கே மாம்பழம் கொடுக்கப்படும். இந்த மாம்பழம் கொடுக்கும் போது பெரிய வீதிக்குச் சென்ற முருகனும் அங்கு வந்து விடுவார்.

    உடனே, பாலமுருகனின் திருவுருவத்தில் சர்வாபரணங்களும் களையப்பெற்று ஆண்டி வேஷம் தரிக்கப்பட்டு தனியே பசுமையான ஒரு சோலையில் எழுந்தருளச் செய்வார்கள்.

    தொடர்ந்து மங்கல வாத்தியம் முழங்க பிள்ளையார், பார்வதி பரமேஸ்வரரையும் அவரவர் வாகனங்களில் அந்தச் சோலைக்கு எழுந்தருளச் செய்து “சமாதானம்” செய்ததாக பாவித்து பூஜை நடக்கும். பிறகு மும்மூர்த்திகளாக இருப்பிடம் சேர்ப்பிப்பார்கள். இது உத்ஸவ நடைமுறை..

    இது இப்படியிருக்க, நான் பிறந்தது 1989.. அப்போது இந்த உத்ஸவம் நம்மூரில் வெகு சிறப்பாக நடந்து வந்தது.. எனது அண்ணாவோ பிள்ளையார் பக்தன். எனக்கோ, அப்போது முருகனிடம் தான் ரொம்பவும் ப்ரியம்.. இதனால் முருகன் ஆண்டியாகப் போகிற போது என் அண்ணாவும் பிறரும் சேர்ந்து என்னை கேலி செய்வார்கள்.. எனக்கு கோபம் கோபமாக வரும்.. சில சமயம் அந்த நேரத்தில் அழுவேன்.. கிண்டல் பண்ணிய சிலருக்கு அடித்தும் இருக்கிறேன்.. (இப்படி அடி வாங்கிய வயதில் பெரியவர் ஒருவரை எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது)

    நான் வளர்ந்த பிறகு, எப்பாடு பட்டாவது இந்த உத்ஸவத்தை ஒழித்துக் கட்ட வேணும் என்று அப்போது நினைத்திருக்கிறேன்..

    என்னே..! ஆச்சர்யம்.. இப்போது அந்த உத்ஸவத்திற்காக அல்லது வைபவத்திற்காக, நானே கட்டுரையும், கவிதையும் எழுதிக் கொண்டிருக்கிறேன்..

    இவற்றை இன்று நினைத்தாலும் சிரிப்பாகவே இருக்கிறது..

    இந்த கதை தெய்வீகச் சஹோதர்களுக்கு இடையில் நடக்கிற போட்டியாக, பல தத்துவங்களை சொல்லும் பாங்கில் அமைவு பெற்றிருக்கிறதை ஒவ்வொருவரும் ரசிக்காமல் இருக்க இயலாது..

    இந்த கதையின் தத்துவார்த்த விஷயங்கள் மேன் மேலும் சிந்திக்க வேண்டியன.. இக்கதை பிற மாநிலங்களில் எப்படி எப்படி எல்லாம் சொல்லப்படுகிறது என்பதும் ஆய்விற்குரியதே..

    தி.மயூரகிரி சர்மா
    நீர்வேலி

  4. Sinthu

    இந்த விஷயம் மிகவும் அற்புதமானது. பாராட்டுதல்கள். ஆனால், சில இடங்களில் கவனக்குறைவாலோ, என்னவோ சில தவறுகள் நேர்ந்துள்ளன.

    முதலாவது திருவிளையாடல் என்ற படத்தில் தான் மாம்பழக்கதை வருகிறது.அந்த காட்சியின் போது வரும், இப்பாடல் மிகவும் சிறப்பானது. புகழ் பெற்றது.

    http://www.youtube.com/watch?v=KDNSM0RyUa8

    இந்த கதைக்கு உரிய திருத்தலமான பழநி பற்றிய தினமலர் காட்டிய விவரணச் சித்திரம் இதோ..

    http://www.youtube.com/watch?v=NLvdnKHm0xY

    கிரந்த லிபி எழுத்தில், ஓரிடத்தில் ஒரு சிறு தவறு இருக்கிறது..

    இரண்டாவது பாடலில் முதல் வரியில் ஷடாநநௌ என்று வர வேண்டும்.அதில் ஷடாநளெ என்று எழுதப்பட்டிருக்கிறது.. தமிழில் சரியாக இருக்கிறது..

    மற்றைய எல்லாம் சரியாகவே உள்ளதெனவே கருதுகின்றேன்.இடையிடையே சந்தம் வியாகரணம் அல்லது சந்தம் ஒன்று அங்கங்கே குழம்புகிறது.ஆனால், மொத்தமாக பார்க்கிற போது, அற்புதமாக இருக்கிறது.

    வாழ்த்துக்கள்.

  5. T.Mayoorakiri sharma

    ஆம்.. இதில் சில தவறுகள் கவனக்குறைவாலும், அறிவுக்குறைவாலும் ஏற்பட்டிருக்கின்றன…. சீதாராம சாஸ்திரிகள் அவர்களின் பழைய பிரதியில் காணக்கிடைக்காத சொற்களை புகுத்தும் போது, நான் வெகுவாக சிரமப்பட வேண்டியிருந்தது..

    இடையில், ஓரிரு கவிதைகளை நானே முழுமையாக எழுத வேண்டியதாயிற்று… சாஸ்திரிகளின் புலமையான எழுத்துக்களுக்கு நடுவே அதே நடையில், எழுதுவது வெகு சவாலான காரியமாயிருந்தது..

    பெரியவர்கள் இவற்றைப் பொறுத்துக் கொண்டு, செம்மைப்படுத்திப் பயன்படுத்த பணிவுடன், வேண்டுகின்றேன்.. சங்கதம் தளத்தாருக்கு எனது இம்முயற்சியை பதிப்பித்தமைக்கு நன்றி கூற வேண்டியவனாகிறேன்..

    இந்த பத்ததியியின் வழியான நிறைவுகள் , பெருமைகள் எல்லாம் இப்பத்ததியின் அடித்தளத்தை அமைத்த மரியாதைக்குரிய அமரர்..கி.சீதாராம சாஸ்திரிகளுக்குச் சேர வேண்டியன.. குறைவுகள் என்னல் உண்டனவை.. அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகின்றேன்..

  6. s. kumaran sarma

    வாழ்த்துக்கள் மயூரகிரி சர்மா . சாஸ்திரிகளின் ஆக்கத்தை வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றிகள் . சந்தேக வினஎ ? முருகன் மயில் பெற்றது எப்போது? சூரா சம்ஹாரத்தின் பின் பெறபட்ட மயில் எப்படி உலகை சுற்ற பயன்பட்டது?

  7. vasanthasyamalam

    यदि एषा कथा संस्कृते लिख्यते तर्हि संस्कृतानुरागिणाम् कृते लाभदायका भवेत् |

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)