பதினைந்தாவது உலக சமஸ்க்ருத மாநாடு வரும் 2012 வருடம் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து பத்தாம் தேதி வரை நடை பெற உள்ளது. இது போன்ற உலக சமஸ்க்ருத மாநாடுகள் 1972 வருடம் துவங்கி பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. சென்ற ஆண்டு (2009) பதினான்காவது மாநாடு ஜப்பானில் நடைபெற்றது. இந்தியாவில் நடைபெறுகிற நான்காவது சமஸ்க்ருத மாநாடு இது.
இந்தியாவில் நடைபெறும் இந்த பதினைந்தாவது மாநாட்டை ராஷ்ட்ரிய சமஸ்க்ருத சம்ஸ்தான் அமைப்பு முன்னின்று நடத்த இருக்கிறது. இந்த மாநாட்டில் சமஸ்க்ருத இலக்கியங்கள் மட்டும் அல்லாது, பாரம்பரிய ஞானத்திலிருந்து உருவான கணிதம், வானவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், ஆயுர்வேதம் மற்றும் மருத்துவங்கள், புவியியல், உயிரியல், உலோகவியல் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகள் – ஆராய்ச்சிகளும் வெளிக்கொணரப் படவுள்ளன. இது தவிர மொழியியல், வேதம், வேதாந்தம் தத்துவம், பௌத்த – ஜைன இலக்கியங்கள், நவீன சம்ஸ்க்ருதம் ஆகிய ஆராய்ச்சிகளும் இடம் பெற உள்ளன.
சிறப்பாக தயாரிக்கப் பட்டுள்ள இம்மாநாட்டில், சில குறைகளும் இல்லாமல் இல்லை. உதாரணமாக இந்த மாநாட்டில் பங்கு கொள்ள ரூ.5000 கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. நடைமுறையில் சமஸ்க்ருத அறிஞர்கள் சம்பள – வேலைவாய்ப்பை பார்க்கும் போது, இந்த கட்டணம் சற்று அதிகம் என்று தோன்றுகிறது. மேலும் இம்மாநாட்டில் மீமாம்சம் – நியாயம் போன்ற செவ்வியல் துறைகளும், பொதுமக்களிடம் பிரபலமாக ஆக்கப் படவேண்டிய சமஸ்க்ருத பத்திரிகையியல் (journalism) போன்ற சில துறைகள் இடம் பெறவில்லை. அதே போல, மாநாட்டில் இடம் பெறுகிற கட்டுரைகளும், உரைகளும் போது மக்களுக்கு கிடைக்கும் வகையில் இணைய தளம், பத்திரிகைகள் மூலம் வெளிவரும் வசதியும் இல்லை.
1997ல் பெங்களூரில் நடைபெற்ற மாநாட்டில் எதிர்பார்ப்பை விஞ்சும் வகையில் பெருமளவு அறிஞர்கள் , சமஸ்க்ருத ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள். சமஸ்க்ருத மொழியை பாதுகாக்கவும், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும், புதிய படைப்புகள் வளர்ச்சி கொள்ளவும் இது போன்ற மாநாடுகள் மிகவும் அவசியம்.

