ராஷ்ட்ரிய சம்ஸ்க்ருத சம்ஸ்தான் அமைப்பின் தேசிய சம்ஸ்க்ருத மாநாடு சிக்கிம் மாநிலம் காங்க்டோக் நகரில், சிந்தன் பவனில் நடந்தது. சமஸ்க்ருத வளர்ச்சிக்கு வடகிழக்கின் பங்களிப்பை ஆராய்வது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. சிக்கிம் மாநில திட்டக்குழு தலைவர் ஸ்ரீ S.M லிம்பு, அமைச்சர் C.B. கார்கி மற்றும் முனைவர் ராதாவல்லப திரிபாதி ஆகியோர் இந்த விழாவை துவங்கி வைத்தனர்.

வடகிழக்கு இந்தியாவில் இத்தகைய விழா நடப்பது இதுவே முதன் முறையாகும். ராஷ்ட்ரிய சம்ஸ்க்ருத சம்ஸ்தான் இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகம் ஆகும். சிக்கிம் மாநில முதல்வர் இந்த விழாவுக்கு எழுத்து மூலமாக வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார். அதில் சிக்கிம் மாநிலத்தில் பனிரெண்டு பள்ளிகள் சம்ஸ்க்ருத கல்வி கற்றுக் கொடுப்பதாகவும், மேலும் பல பள்ளிகளை துவங்க இருப்பதாகவும் தெரிவித்தார். சிக்கிம் மாநிலம் மிகப் பழமை வாய்ந்தது; அது பல்வேறு சம்ஸ்க்ருத படைப்புகளில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து திரு. லிம்பு அவர்கள் பேசும்போது, 1980-82 ஆண்டுகளில் அவர் கல்வி அமைச்சராக இருந்தபோது இரண்டு மூன்று சம்ஸ்க்ருத பள்ளிகளை துவங்கியதை நினைவு கூர்ந்தார். திரு கார்கி பேசுகையில் 1994 ஆண்டு வரை சிக்கிம் மாநிலத்தில் பல்கலைக் கழகங்களே இல்லாமல் இருந்ததை நினைவு கூர்ந்து இப்போதைய அரசு மேலும் பல பள்ளிகளை துவங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
National Sanskrit Seminar in Gangtok

