உத்தர கண்ட மாநிலத்தில் சம்ஸ்க்ருதம் இரண்டாவது அதிகாரபூர்வ மொழியாக இருக்கும் என்று அந்த மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் நிஷான்க் அறிவித்தார். பொதுவாக நடைமுறை உபயோகத்திற்கு சம்ஸ்க்ருதம் உபயோகப்பட இந்த முயற்சி உதவும் என்பதே நோக்கம் என்று அவர் கூறினார். BHEL நிறுவனத்தின் சரஸ்வதி கலா மந்திர் பள்ளியில், அகில உலக நேபாளி – சம்ஸ்க்ருத மாநாட்டில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மேலும் பேசிய அவர், சம்ஸ்க்ருத அகாதமி நடத்தும் போட்டிகளில் வெல்பவர்களுக்கு, ஒரு லட்சம், ஐம்பது ஆயிரம், இருபத்தி ஐந்தாயிரம் என பரிசுகளும் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய முதல்வர், இந்தியாவுக்கு உலக அளவில் மதிப்பும் மரியாதையும் கிடைப்பதற்கு சம்ஸ்க்ருத மொழியும் அதிலுள்ள காவியங்களும், சிந்தனைகளும் ஒரு முக்கிய காரணம் என்றார்.
இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவர் திரு.K.C. சுதர்சன் சம்ஸ்க்ருதம் எல்லா மொழிகளுக்கும் தாய். பலரும் அதை கற்பது கடினம் என்று நினைக்கிறார்கள் – உண்மையில் அது மிகவும் எளிது, என்றார். அவர் மேலும் கூறுகையில் இந்தியாவில் உருது மொத்தம் பதினெட்டு மாநிலங்களில் இரண்டாவது அதிகார பூர்வ மொழியாக இருக்கிறது. இந்தியாவிலேயே உத்தர கண்ட மாநிலம் தான் முதன் முறையாக சமஸ்க்ருதத்தையும் அதிகார பூர்வ மொழியாக அறிவித்திருக்கிறது. இது மிகச்சரியான ஒரு முடிவு என்று கூறினார்.
உத்தரகண்ட மாநிலம் சம்ஸ்க்ருத மொழியுடனும் பாரத தொன்மையிலும் மிகவும் முக்கியம் இடம் வகிக்கக் கூடியது. இந்த பிரதேசத்தில் இருந்து தான் வியாசர் மகா பாரத கதையை இயற்றினார் என்பது நம்பிக்கை. மகா கவி காளிதாசர் பிறந்ததும் இங்கே தான் என்று கூறுவர். இந்துக்களின் புனித தலங்களான ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய இடங்கள் இந்த மாநிலத்தில் தான்உள்ளன.


Warning: call_user_func(mytheme_comment) [function.call-user-func]: First argument is expected to be a valid callback in /f5/sangatham/public/wp-includes/comment-template.php on line 1334