முருகன் தந்த வடமொழி இலக்கணம்

வியாகரணம் அல்லது இலக்கணம் என்பது ஒரு மொழிக்கு மிகவும் அவசியம். தமிழுக்கு நன்னூல், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் இருப்பது போல சம்ஸ்க்ருத மொழிக்கு முக்கியமாக ஒன்பது வகை இலக்கண நூல்கள் உள்ளன.  ராமாயணத்தில் அனுமன் இந்த ஒன்பது வகை வியாகரணங்களையும் சூரியனிடம் கற்றுத் தேர்ந்ததாக சொல்லப் படுகிறது. அதனால் அவருக்கு நவ வியாகரண பண்டிதன் என்று பெயர். சூரிய பகவான் உதித்ததில் இருந்து அவர் முன்னால் அமர்ந்து நாள் முழுவதும் சூரியனுடனேயே நகர்ந்து மாலையில் சூரியன் அஸ்தமனம் ஆவது வரை கல்வி கற்றதாக புராணங்களில் கூறப் படுகிறது. 

இவ்வாறு சொல்லப் படுகிற ஒன்பது வகை இலக்கண நூல்கள் எவை? 

ऐन्द्रं चान्द्रं काशाकृत्स्नम् कौमारं शाकटायनं |
सारस्वतम् चापिशलं शाकलं पाणिनीयकं ||

ஐந்த்³ரம்ʼ சாந்த்³ரம்ʼ காஸா²க்ருʼத்ஸ்னம் கௌமாரம்ʼ ஸா²கடாயனம்ʼ |
ஸாரஸ்வதம் சாபிஸ²லம்ʼ ஸா²கலம்ʼ பாணினீயகம்ʼ ||

இந்திர வியாகரணம், சந்திர வியாகரணம், காஸா²க்ருʼத்ஸ்னம் கௌமாரம்ʼ ஸா²கடாயனம்ʼ, ஸாரஸ்வதம் ஆபிஸ²லம்ʼ, ஸா²கலம்ʼ, பாணினீயம் ஆகியவையே அந்த ஒன்பது இலக்கணங்கள். (தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் இந்திர வியாகரணத்தை ஒட்டி எழுதப் பட்டது என்பதாக இளம்பூரணர் எழுதியுள்ள உரையில் “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியம்” என்று தன் தொல்காப்பிய முன்னுரையில் குறிப்பிடுகிறார்.)  இவற்றில் பாணினியின் இலக்கணமே இன்றும் புழக்கத்தில் உள்ளது. இந்திர, சந்திர வியாகரணங்களைத் தவிர ஏனைய மற்ற இலக்கண நூல்கள் அதிகமாக புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டன. 

இதில் கௌமாரம் என்று அழைக்கப் படும் வியாகரணத்துக்கு,  கலாபம், கா-தந்திர  வியாகரணம் என்றும் இதர பெயர்கள் உண்டு. இந்த இலக்கண நூலின் பின்னணியில் ஒரு கதை உண்டு. 

வெகு காலம் முன்பு அரச மொழியாக சம்ஸ்க்ருதமே எங்கும் இருந்து வந்தது. அக்காலத்தில் இருந்த சாலிவாகனன் என்னும் மன்னனுக்கு சம்ஸ்க்ருத மொழி தெரியாது. அந்நிலையில் ஒரு நாள் சம்ஸ்க்ருத மொழியில் சொல்லப் பட்டதை தவறாகப் புரிந்து கொண்டு தன் மனைவியிடம் கேலிக்கு ஆளாகி (முழுக் கதையும் இங்கே), அதன் பின்னர் ஆறே மாத காலத்தில் சம்ஸ்க்ருதம் கற்க விரும்பினார். ஆறே மாதத்தில் சம்ஸ்க்ருதம் கற்க இயலாது என்று கற்றுக் கொடுக்க யாரும் முன்வராத போது சர்வ வர்மன் என்று ஒரு சம்ஸ்க்ருத மேதை தான் கற்றுக் கொடுப்பதாக முன்வந்தார்.

எனினும் ஆறேமாதத்தில் கற்கும் அளவுக்கு சம்ஸ்க்ருத இலக்கணத்தை சுருக்க வழி தெரியாமல் சிவ பெருமானை வழிபட, சிவனும் மனமிரங்கி எளிய இலக்கணம் ஒன்றை இயற்ற உதவுமாறு முருகப் பெருமானைப் பணித்தார். இவ்வாறு முருகனின் அருளால் கலாபம் அல்லது கௌமாரம் அல்லது கா-தந்திரம் என்று அழைக்கப் படும் இலக்கணம் தோன்றியது. இது பாணினியின் இலக்கணப்  பிரயோகங்களை பல வகையில் ஒத்து இருந்தாலும் பெருமளவு இலக்கண விதிகளின் அமைப்பை இந்நூல் மாற்றி அமைக்கிறது. இந்த கலாப இலக்கண நூலை அடிப்படையாக வைத்து பல இடங்களில் செம்மை செய்தே வியாகரண சித்தாந்த கௌமுதி இயற்றப் பட்டதாக கூறுவர்.

முருகனின் மயிலுக்கு சம்ஸ்க்ருதத்தில் கலாபம் என்று பெயர். அந்த பெயராலும் இந்த இலக்கணம் விளங்குகிறது. காஷ்மீரம், திபெத் பகுதிகளில் வாழ்ந்த சம்ஸ்க்ருத அறிஞர்கள் இதில் பெறும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். தென்னாட்டவரின் இறைவன், பாரதத்தின் மணிமுடி வரை வாழ்ந்த அறிஞர்களுக்கு எல்லாம் இலக்கணம் தந்த கல்வித் தெய்வம் என்று எண்ணும் போது மனதில் பெருமை  ஏற்படுகிறது. ஆனால் கா-தந்திர வியாகரணம் தழைத்த திபெத்தும், காஷ்மீரமும் இன்றைக்கு கலைப்பயிர் விளைய முடியாத, வறண்ட பகுதியாகி விட்டதும் நினைவுக்கு வருகிறது. 

Tags: , , , , ,

3 மறுமொழிகள் முருகன் தந்த வடமொழி இலக்கணம்


    Warning: call_user_func(mytheme_comment) [function.call-user-func]: First argument is expected to be a valid callback in /f5/sangatham/public/wp-includes/comment-template.php on line 1334

    Warning: call_user_func(mytheme_comment) [function.call-user-func]: First argument is expected to be a valid callback in /f5/sangatham/public/wp-includes/comment-template.php on line 1334

    Warning: call_user_func(mytheme_comment) [function.call-user-func]: First argument is expected to be a valid callback in /f5/sangatham/public/wp-includes/comment-template.php on line 1334

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் கருத்து: